மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களுக்கு எதிராக புதிய சட்டம்…..
போதைப் பொருள் பயன்படுத்தி விட்டு வாகனங்களை செலுத்துபவர்களுக்கு எதிராக புதிய சட்டம் ஒன்று உருவாக்கப்படவுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், சாரதிகளின் சட்டவிரோத செயற்பாடுகள் காரணமாக வீதி விபத்துகள் அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டார்.
இதனை கட்டுப்படுத்துவதற்காக விசேட வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. கடந்த ஆண்டு 22 ஆயிரம் வாகன விபத்து சம்பவங்கள் பதிவாகியுள்ளன அவற்றில் 2 ஆயிரத்து 470 பேர் உயிரிழந்தனர். அத்துடன் குறித்த விபத்துகளில் 14 ஆயிரம் பேர் காயமடைந்தனர்.
நாளாந்தம் வாகன விபத்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கின்றது. அதிகரித்து வரும் விபத்துகள் காரணமாக வீதிகளில் உடற்பயிற்சி செயற்பாடுகளில் ஈடுபடாமல் விளையாட்டு மைதானங்கள் மற்றும் நடைபாதை என்பவற்றை பயன்படுத்துமாறும் சிரேஷ்ட பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன அறிவுறுத்தியுள்ளார்.